சிவரக்கோட்டை - அழியும் பசுமை சூழல்

இந்த கிரமத்த, கடைசியா ஒருதரம் பார்த்துக்கோங்க...

மதுரையில் உள்ள அழகிய கிராமங்கள், பல்லுயிர் சூழல் அழிய போகிறது. கடைசியா ஒருதரம் பார்த்துக்கோங்க. 
"மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை, கரிசல்காளம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 1478.71 ஏக்கர் விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு எடுக்கும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலங்கள் விவசாய நிலமாய் இல்லை என்ற அரசு நிர்வாக அதிகாரிகளின் கூற்றுகளை பல குழுக்கள் நேரடியாக கள ஆய்வு செய்து பொய் என்று நிரூபித்துள்ளன.

கம்பு, வரகு, சோளம், பருத்தி, துவரை, மொச்சை, பச்சைப்பயிர், சுண்டல், ஓமம் போன்ற 30க்கும் மேற்பட்ட உணவுத்தானியப் பொருட்கள் தற்போதும் சாகுபடி செய்து வரும் இந்த பூமியில் நித்ய கல்யாணி, அவுரி போன்ற மூலிகைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. கரிசல்காளம்பட்டியில் சிவரக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு அவரி மானியம், தேசிய மூலிகை பயிர் இயக்கம், மாவட்ட இயக்குநர் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதே போல, சிவரக்கோட்டை பகுதி விவசாயிகள் துவரையை, இதற்கான ஆதாரங்களை விவசாயிகள் சிவரக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 4173 கிலோ அவரையைக் கொள்முதல் செய்துள்ளனர். கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பத்து சதவீதம் கொள்முதல் செய்ததே இத்தனை கிலோ என்றால் 90 சதவீதம் வெளிமார்க்கெட்டில் எத்தனை கிலோ விற்பனை செய்யப்பட்டிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

 












இந்த ஆதாரங்களைக் காட்டும் விவசாயிகள், "பொன்விளையும் பூமியான எங்கள் பூமியை மலட்டு பூமியெனக் காட்ட பல்வேறு வேலைகளைச் செய்கிறார்கள். எங்களது மூன்று ஊர்களில் உள்ள பத்து ஊரணிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் சுமார் 45 இலட்ச ரூபாய்க்கான வேலைகளும், வேளாண் பொறியியல் துறை மூலம் நீர் செருவூட்டல் திட்டத்தில் சிவரக்கோட்டையில் சுமார் 2 இலட்சத்து 62 ஆயிரம் செலவு செய்ததில் 5 ஊரணிகளில் பணிகள் நடைபெற்றுள்ளது. அரசுக்கு 100 குவிண்டால் துவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது ஆதாரங்களுடன் உள்ளது" என்று கூறுகிறார்கள்.

இந்த நிலையில் சிவரக்கோட்டை, கரிசல்காளாம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு எடுத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. நில எடுப்பு செய்வதற்காக கடந்த 2008 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட முன்மொழிவுகள் அடிப்படையிலேயே விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிவரக்கோட்டையில் 363.56 ஹெக்டேர் நிலம், கரிசல்காளம்பட்டியில் 753.64 ஏக்கர் நிலம், சுவாமி மல்லம்பட்டியில் 361.51 ஏக்கர் நிலம் நில ஆர்ஜிதம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடிமாட்டு விலை:
புஞ்சை நிலங்கள் என்று அரசு உத்தரவிலேயே கூறப்பட்டுள்ள இந்த விளைநிலங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை எவ்வளவு தெரியுமா? சிவரக்கோட்டையில் 1 சென்ட் நிலம் 828 ரூபாய், கரிசல்காளம்பட்டியில் 1 சென்ட் நிலத்திற்கு 357 ரூபாய், சுவாமி மல்லம்பட்டியில் 1 சென்ட் நிலம் 185 ரூபாய். இதில் விந்தை என்னவென்றால் சிப்காட் வரப் போவதாகக் கூறி சிவரக்கோட்டை அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பல ரியல் எஸ்டேட் கம்பெனிகள் சென்ட் நிலத்தை 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் என்று விளம்பரம் செய்து வருவது தான்.

17.02.2014 Times Of India

21.02.2014 The Hindu
அரசு கையப்படுத்த நினைக்க முயலும் மூன்று கிராமங்களுக்கு அருகில் கள்ளிக்குடி பிட்1ல் 961.15.00 ஹெக்டேர், பிட்2ல் 589.23.5 ஹெக்டேர், வெள்ளாகுளம் பிட்2-ல் 663.15.0 ஹெக்டேர் என 2213.88.5 ஹெக்டேர் என 5 ஆயிரம் ஏக்கர் பரப்புள்ள பயன்பாடு இல்லாத தரிசு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை அரசு கண்டு கொள்ளவில்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி இப்பகுதியில் அதிகாரம் படைத்த பலர், பினாமி பெயர்களில் 400 ஏக்கர் முதல் பல்வேறு வகையில் நிலங்களை வளைத்துப் போட்டு வருகின்றனர். நில உச்சவரம்பு சட்டம் இப்பகுதியில் கேலிக்கூத்தாக்கப்பட்டு வருகிறது. சிவரக்கோட்டை, கரிசல்காளன்பட்டி, சுவாமி மல்லம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள 1478.71 ஏக்கர் நிலங்களைப் பாதுகாக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் களம் இறங்கியுள்ளது." செய்தி ப.கவிதாகுமார் (கீற்று இணைத்தளம்)

பறவைகள் ஆவண ஒளிப்பட நிகழ்வு:
ஐயா சிவரக்கோட்டை ராமலிங்கம் அவர்களை ஒரு பொது நிகழ்வில் சந்தித்த பிறகுதான் சிவரக்கோட்டை குறித்து எங்களுக்கு ஒரு அறிமுகம் கிடைக்கிறது. அழிவின் நிலையில் உள்ள அக்கிராமத்திற்கு நீங்கள் எல்லோரும் வர வேண்டும், அதை பாதுகாக்க உங்களால் முடிந்த ஒத்துழைப்பை தர வேண்டும் என்றார். சிவரக்கொட்டையின் இயற்கை வளம் எத்தனை பெரியது என்று மதுரை நகரத்திற்கு எடுத்துகாட்டும்படி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்ய திட்டமிட்டோம். அதன் விளைவே பறவைகள் ஆவண ஒளிப்பட நிகழ்வு (Bird Watching Event).
மதுரை திருமங்கலம் - விருதுநகர் செல்லும் வழியில் அமைந்துள்ளது சிவரக்கோட்டை. திருமங்கலத்தில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் அது. கடந்த 16.02.2014 ஞாயிறு அன்று 20க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கோடு "பறவை ஆவண ஒளிப்பட நிகழ்வு" (Bird Watching Photography) காரணமாக  சிவரக்கோட்டைக்கு சென்று இருந்தோம். நாங்கள் ஊருக்குள் அடியெடுத்து வைத்த கணம் முதல் திரும்பி செல்லும் வரை எங்களை அன்போடு உபசரித்து வழி நடத்தி, வழியனுப்பினார் ஐயா திரு. இராமலிங்கம் அவர்கள். அப்படியே ஊர் சுற்றிவிட்டு வரலாம் என்ற எண்ணத்தில் திட்டமிடபட்டதல்ல இந்த பறவை ஆவண ஒளிப்பட நிகழ்வு. கிராமத்தின் அழகை, அழிவை படம்பிடிக்கும் முயற்சியே இந்த நிகழ்வு.

சிவரக்கோட்டையின் சிறப்புகள்:
பண்டைய கால பாண்டிய மன்னன் ஒருவன் சுவர் எழுப்பி கோட்டை அமைத்து, ஆட்சி செய்த ஊர் சுவர்க்கோட்டை என்றும், பின்னாளில் சிவரக்கோட்டை என்றும் திரிந்தாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். 
ஒரு சிறிய குன்றின் மேலே மிகவும் பழமையான ஒரு பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. கம்பு, வரகு, சோளம், பருத்தி, துவரை, மொச்சை, பச்சைப்பயிர், சுண்டல், ஓமம் போன்ற 30க்கும் மேற்பட்ட உணவுத்தானியப் பொருட்கள் தற்போதும் சாகுபடி செய்து வரும் இந்த பூமியில் நித்ய கல்யாணி, அவுரி போன்ற மூலிகைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சிவரக்கோட்டையில் நெடுஞ்சாலையை கடக்க முயலும் புள்ளி மான்கள் வாகனத்தில் மோதி சாகும் செய்தியை அடிக்கடி பார்க்க முடிகிறது. இச்செய்திகள் புள்ளிமான்கள் சிவரக்கோட்டையில் வாழ்ந்து திரிவதை உறுதி செய்கிறது. சிறகு விரித்து பறக்கும் பல்வேறு பறவைகளும், ஆங்கங்கே சிறிய குன்றுகளும்,  அதை சுற்றி எங்கும் வெள்வேலம், நாட்டு வேலம், ஆலம், அரச மரங்களும், அம்மரங்களில் பல்வேறு பறவைக் கூடுகளும்,  குன்றுகளின் கீழே தண்ணீர் ததும்பும் ஊருணிகளும், அதில் பூத்திருக்கும் அள்ளி மலர்களும், அந்த அள்ளி மலரை மொய்க்கும் வண்டு பூச்சி இனங்களும் என இயற்கை வளம் பெருகி, பல்லுயிர் செழித்திருக்கும் பசுமை பூமி சிவரக்கோட்டை. தங்கள் நிலத்தை பாதுகாக்க 6 வருடங்களுக்கு மேலாக அரசோடு போராடி வரும் உழவர்களின் போராட்ட களமாகவும் சிவரக்கோட்டை திகழ்கிறது. "தயா பொறியில் கல்லூரி என்ற பெயரில் மு.க.அழகிரி (திமுக) கரிசல்குளம் நீர்நிலையும் பொது நிலங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமித்திருக்கிறார்" என்று நீதிமன்றம் வரை சென்று தைரியாமாக ஆளும் கட்சிக்கு எதிராக வழக்கு தொடுத்து, தயா பொறியில் கல்லூரிக்கு நீதிமன்ற தடை பெற்று இருக்கும் போராளி ஐயா சிவரக்கோட்டை ராமலிங்கம் பிறந்த ஊர் சிவரக்கோட்டை. அரசியல் அயோக்கியர்களின் அத்துமீறல்களுக்கு எதிராகவும், வேளாண் நிலங்களை பலி கேட்க்கும் அரசின் சிறப்பு பொரளாதார மண்டலத்திற்கு எதிராகவும் "மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கம்" துவங்கி  இன்று வரை போராடி வருகிறார் ஐயா இராமலிங்கம். அவரின் பாதுக்காப்பு கருதி நீதிமன்றமே அவருக்கு கை துப்பாக்கி வழங்கி இருக்கிறது என்றால் மண்ணை காக்கும் அவரின் சமூக அக்கறை எத்தகையது என்று எண்ணி பாருங்கள். 








சமூக ஆர்வலர்கள் கருத்து: 
பத்திரிக்கையாளர்கள் திரு. ஸ்ரீகுமார் மற்றும் திரு. தேவநாதன் உடன் வந்திருந்தார்கள். "பஞ்சுருட்டான், துக்கனாங்குருவி, நீர்காகம், உன்னிக்கொக்கு, ஆந்தை, கழுகு, நாரை, என இன்றைய பறவை ஆவண ஒளிப்பட நிகழ்வில் 40க்கும் மேற்பட்ட பறவைகளை ஆவணப்படுத்தி இருக்கிறோம். இத்தனை வகை பறவைகளை இந்த கிராமத்தில் பார்த்து மகிழ்வோம் என்று நான் எண்ணிப் பார்க்கவே இல்லை. சிவரக்கோட்டை ஒரு பல்லுயிர் காடு. இதை அவசியம் பாதுக்காக்க வேண்டும்" என்றார் பறவை ஆர்வலர் திரு. ந.இரவீந்திரன். "கிராமங்கள் தோறும் உள்ள பல்லுயிர் சூழலை அவர்களின் பாரம்பரிய அறிவோடு ஆவணப்படுத்த வேண்டும்" என்றார் "ஓசை" அமைப்பை சேர்ந்த இளஞ்செழியன். "பறவைகளை பற்றி நீங்கள் அறிந்து கொள்வதாக இருந்தால் ஒளிப்பட கருவியை விட மிக முக்கியம் உங்கள் சுய ஆர்வம்" என்றார் காட்டுயிர் ஆர்வலர் திரு.ஸ்ரீராம் ஜனக். "மக்களின் வாழ்வாதரத்தை காவு வாங்கும் எந்த திட்டத்தையும் இந்த மண்ணில் அனுமதிக்க கூடாது. அதற்க்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்" என்றார் தமிழ்நாடு மாணவர் இயக்கத்தை சேர்ந்த திவ்யா. "மண்ணையும் தன் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க போராடும் ஐயா சிவரக்கோட்டை இராமலிங்கத்தின் அனைத்து பொது முயற்சிகளுக்கும்  உறுதுணையாக இருப்போம்" என்றார் நாணல் நண்பர்கள் குழுவை சேர்ந்த ஒளிப்பட கலைஞர் திரு. இரா. பிரபாகரன். 
 
தங்கள் தாய் நிலத்தை, வாழ்வாதாரத்தை, கால்நடைகளை, நட்டார் தெய்வங்களை, கோவில்களை, பல்லுயிர் சூழலை என ஒட்டு மொத்த கிராமத்தை காக்கும் போராட்டங்களை பல வருடமாக நடத்தி வருகிறார்கள் அப்புகுதி மக்கள். மதுரையில் உள்ள சிவரக்கோட்டையில் பல வருடமாக நடந்து வரும் போராட்டம் பற்றி நம் எத்தனை பேருக்கு தெரியும்? தற்பாதுகாப்பிற்க்காக நீதி மன்றம் வழங்கிய கைதுப்பாக்கியோடு திரியும் போராளி சிவரக்கோட்டை ராமலிங்கத்தை..., பாண்டிய மன்னன் வந்து தங்கிய வரலாற்று சிவரக்கோட்டையை..., மான்கள், காட்டு பன்னிகள், பறவைகள் நிறைந்த சிவரக்கோட்டையை..., இயற்கை வழி விவசாய பூமி சிவரக்கோட்டையை, போராட்ட களமான சிவரக்கோட்டையை நம் எத்தனை பேருக்கு தெரியும்?

மதுரையின் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு, நகர வளர்ச்சி வேலைவாய்ப்பு என்ற பெயரில் நம் அழகிய கிராமங்களை அப்படியே விழுங்குகின்றன ஏகதிபத்திய ஆதிக்க அரசியல் சக்திகள்.

07.03.2014 தினத்தந்தி
எல்லாவற்றையும் வளர்ச்சி என்னும் பூட்ஸ் கால்களில் நசுக்கிய பிறகு உழவன், கிராமத்தான், அவர்களுடைய பாரம்பரிய அறிவு, கால்நடை, பறவை, பூச்சி, புழு என எதையும் இனி சிவரக்கோட்டையில் பார்க்க முடியாது. அதை ஆவணப்படுத்தும் சிறு முயற்சியாக  எங்களின் இந்த பறவைகள் ஆவண ஒளிப்பட நிகழ்வு அமைந்தது. 

அதனால்தான் சொல்கிறோம்.....
பசுமை பொங்கும் இந்த பல்லுயிர் கிராமத்தை கடைசியாக ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்...


ஒளிப்படங்கள்:
திரு. ஸ்ரீராம் ஜனக்
திரு. ரவீந்திரன்
திரு. குணா அமுதன்
திரு. இளஞ்செழியன்
திரு. பிரபாகரன்
 

தமிழ்தாசன் 
நாணல் நண்பர்கள் குழு
9543663443
https://www.facebook.com/palluyirkaadu

Comments

Popular posts from this blog

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்

மாட்டு இறைச்சியும் எங்கள் பண்பாடே!

வெள்ளிமலை கோயில்காட்டை மீட்போம்